விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை

 

வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார்.

இது குறித்து பவன் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்:

 

“தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது. அதில் பலவற்றை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள்  இடம் பெற்றிருந்தாலும் இயற்கை வேளாண்மை குறித்த அறிவிப்புகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். அதிலும் குறிப்பாக…

 

  • வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்
  • 2021-22ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்
  • 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு
  • ரூ.6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 10 புதிய உழவர் சந்தைகள்
  • கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750லிருந்து ரூ.2900 ஆக உயரும்
  • ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும்
  • கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
  • அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ.25லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி

 

இப்படி வேளாண் துறையில் புதுமைகளை புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும், வேளாண் தனி பட்ஜெட்டில், 34 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

அதோடு, வேளாண் பட்ஜெட்டில், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

 

இப்படி எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம். முடிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம். அறிவிப்புகள் அப்படியே செயல் வடிவத்துக்கு வந்தால் தமிழக விவசாயிகள் வாழ்க்கைத்தரம் கண்டிப்பாக கொஞ்சமாவது உயரும். இவ்வாறு அறிக்கையில் பவன் குமார் கூறியுள்ளார்.